Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல்.

இன்றுகாலை வீட்டில் இருந்த புறப்பட்டபோது எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. நீல வானம். 16 பாகை வெய்யில். சுகமான மெதுகாற்று. வீதியில் அழகிகள். எக்சேட்ரா எக்சேட்ரா.
போயிருந்த இடத்தில் அனிச்சையாக காற்சட்டைப் பையினுள் கையைவிட்டேன். மனது திடுக்கிட்டது. வீட்டுத்திறப்பைக் காணவில்லை. திறப்புடன் 64gb usb pendriveம் அதில் எனக்கு அவசியமான ஆவணங்களின் backupஉம் இருக்கிறது. அதுவும் மாயமாக மறைந்துவிட்டிருந்தது.
வாகனத்தில், நண்பரின் வீட்டில், கடையில், நடந்துபோன வழியில் என்று எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் உயிரோடு இல்லை.
வீட்டு ஜன்னலை திறந்துவிட்டு வந்தேனோ என்பதும் நினைவில்லை. அப்படியென்றால் ஜன்னலால் உள்ளே பாயலாம்.
வாகனத்தை வீட்டிருகில் நிறுத்திவிட்டு ஜன்னல் திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஜன்னல் மூடியிருந்தது.
எப்படியோ கதவினை உடைக்கவேண்டும். வானத்தினுள் இருந்தபடியே வீட்டு உரிமையாளருக்கு அறிவித்தேன். புதிய கதவின் செலவு உன்னுடையது என்றார் அன்பாக. மறுக்க முடியுமா?
திறப்பு செய்யும் கடைக்கும் தொலைபேசினேன். கையை விரித்தார்கள்.
கதவு உடைப்பதா... ”பொறு வருகிறேன் அது சின்ன வேலை” என்றபடியே வருவதாக அறிவித்தான் ஒரு சுத்தத் தமிழன்.
நான் தமிழன் வரும் வரையில் தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தேன்.
தமிழன் வந்ததும் வீட்டுக்குச் சென்றோம்.
திறப்பு கதவில் தொங்கிக்கொண்டிருந்தது.
கதவு உடைக்க வந்த தமிழன் வீட்டுக்குள் இருந்த சந்தோச நீர் போத்தல் ஒன்றையும், நேற்று இராப்பிச்சையாக கிடைத்த 5 ரோல்ஸ்இல் 3ஐயும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.
ஒரு சிறு துரும்பையேனும் அசைக்காமல் ஒரு புதிய கொன்யாக் போத்தலை துாக்குவது அதர்மம்..
என்ட Oslo முருகா .. இது நல்லா இல்ல ஆமா

புல்லாலானாலும் புருசன் நாயானாலும் புருசன்.

வேதனைகள் பலவிதம். இது சற்று வித்தியாசமானது. நீங்களும் அறிந்து வைத்திருங்களேன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு ஒரு மனைவியும் உண்டு. இருவரும் நல்லவர்கள். எனக்கு.
இவர்களை சந்தித்து பல காலம் ஆகிவிட்டதால் சென்ற கிழமை அவர்களை எட்டிப் பார்ப்போம் என்று புறப்பட்டேன். அவர்கள் நகரத்துக்கு வெளியே சற்றுத் தூரத்தில் வாழ்கிறார்கள். எனவே பெருவீதிகள், சிறுவீதிககள், காடு, மலை, அறுகள் கடந்து சென்று வாகனத்தை நிறுத்தியபோது வீடு அழகாய் இருந்தது. வீட்டின் வெளியே நன்ற அல்ஷேசன் நாய்க்குட்டி “நீ யார்” என்பதுபோல் என்னைப் பார்த்து குரைத்தது.
நண்பர் வந்தார். நாய்குட்டியிடம் சத்தம் போடாதே என்றார். அது அவரை ஒரு மனிதாகவே கணக்கில் எடுக்கவில்லை.
நண்பரின் மனைவி வந்தார். ஒரு சிறு அதட்டு அதட்டினார். நாய்குட்டி அமைதியாகியது. என்னை நாய்க்குட்டிக்கு அறிமுகப்படுத்திவிட்டு என்னையும் நாய்குட்டியையும் வீட்டுக்குள் அழைத்துப்போனார். திருடனைக் கண்ட நாய்போன்று நாய்க்குட்டி என் முன்னேயே நாக்கை தொங்கப்போட்டபடி குந்தியிருந்தது. நான் என்ன விளையாட்டுக் காட்டினாலும் அது அசையவே இல்லை.
நாம் உட்கார்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் அருமைப் பாரியாரும் வந்தமர்ந்தார்.
அவர்களின் வரவேற்பரை நீள் சதுரமானது. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்து உரையாடினோம். அந்த இருக்கைக்கு நேரே மறு மூலையில் நண்பரின் சாப்பாட்டுமேசை இருந்தது.
தேனீர், சிற்றூண்டி வந்தது. உண்டு குடித்து மகிழ்ந்திருந்தோம். அப்போதுதான் என் கண் அந்தக் காட்சியைக் கண்டது.
நண்பரின் வரவேற்பறை இருக்கைகளுக்கு மேலே இருந்த அதி விலையுயர்ந்த அலங்கார மின்விளக்கின் ஒரு பகுதி உடைந்திருந்தது.
என்னது உடைந்திருக்கிறதே என்று அதனை ஆராய்ந்தேன். நண்பர் ஆம் இது உடைந்துவிட்டது. இதற்குரிய உதிரிப்பாகத்தை எங்கே வாங்கலாம் என்றார். எனது சிற்றறிவுக்கு அதற்குரிய உதிரிப்பாகத்தை வாங்குவது முடியாத காரியம் என்று புரிந்ததால் அதனைச் சொன்னேன். நண்பரின் முகம் குடிகாரனுக்கு தவறணையில் சாராயம் இல்லை என்றது போலாயிற்று.
நண்பரின் மனைவி அசாதாரண அமைதியாய் இருந்தார். நாய்குட்டியும் தான்.
என் கர்மாவிற்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான மனிதர்களிடம், தவறான கேள்வியை, தவறிப்போய் கேட்டுவிடுவதுதான் அது. அன்றும் அது நடந்தது.
நான் உட்கார்ந்திருந்தது பதிவான ஒரு சோபாவில் மின் விளக்கு இருந்ததோ ஒட்டகச்சிவிங்கி உயரத்தில். இது எப்படி உடையும் என்று எனக்குத் தோன்றியதை நான் யோசிப்பதற்கிடையில் வாய் அதனை வெளியே துப்பிவிட்டது.
நண்பர் மனையாளைப் பார்க்க.. மனையாள் நண்பரைப் பார்க்க என் நண்பர் அசடு வழிந்தார். நண்பரின் மனைவி அரம்பித்தார்.
நண்பருக்கு நாய் என்றால் அதீத விருப்பம். அவரின் யாழ்ப்பாண வீட்டில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நாள் காவல் இருந்ததாம் என்பார். நானும் ஓம் யாழ்ப்பாணம் என்றால் கள்ளர் அதிகம்தான். 4 நாய் காணாதே என்று சற்று பிரதேசவாதமும் காட்டியிருந்தேன் சில வருடங்களுக்கு முன்.
நண்பரின் பையன்கள் இருவரும் வேறு இடத்தில் வேலை செய்வதால் அவர்கள் வேறு இடத்தில் வாழ்கிறார்கள். எனவே நண்பர் நாய்க்குட்டி வாங்குவதற்கு விரும்பினார். விரும்பினால் மட்டும் காணுமா. மேலிடம் அனுமதிக்கவேண்டுமல்லவா. எனவே விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏற்ற நேரத்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அந்த நேரமும் வந்தது. நேரம் வந்தபோது நண்பர் நான் இப்போது உட்கார்ந்திருந்த பதிவான சோபாவில் உட்கார்ந்திருந்திருந்திருக்கிறார். மேலிடம் நான் முன்பு கூறிய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்திருக்கிறது.
இப்போது நீங்கள் இருவரும் உட்கார்ந்திருக்கம் சூழலை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நீள் சதுர வரவேற்பறை. அதன் மூலைகளுக்கு நாம் A, B, C, D என்று பெயரிவோம். ஒரு மூலையில் (A) பதிவான சோபாவில் நண்பர் உட்கார்ந்திருக்கிறார். எதிரே மறு மூலையில் (C) மனைவி உட்கார்த்திருக்கிறார். வலது பக்க மூலையில் (D) உயரத்தில் மின் விளக்கு சிவனே என்று தொங்கிக்கொண்டிருக்கிறது.
“அம்மா, பெடியளும் வீட்டில இல்ல.. எனக்கு அலுப்படிக்குது” என்று நண்பர் கதையை அரம்பித்தாராம்.
“உங்களுக்கு 25 வருசமா அதுதானே வேலை, வெளியே போய் புல்லு வெட்டுங்கோ” இது அன்பு மனையாள்.
நண்பருக்கு காது சற்று சூடாகினாலும் நாய்குட்டி விடயம் முக்கியம் என்பதால் அமைதியாக இருக்கிறார்.
“உனக்கும் தனிமை. எனக்கும் தனிமை” என்கிறார் நண்பர்.
“சரி.. சரி.. இழுத்தடிக்காம விசயத்தை சொல்லுங்கோ” இது மனைவி
“இல்லம்மா…”
“என்ன அன்பு எக்கச்சக்கமா வழியுது”
நண்பரின் பொறுமை காற்றில் பறக்க ஆயத்தமாக இருந்தாலும், நாய்க்குட்டிக்காக பொறுத்துக்கொள்கிறார்.
“உனக்கும் நீரழிவு நோய், எனக்கும் கொலஸ்ரோல்” இது நண்பர்.
“அது மட்டுமா உங்களுக்கு.. ஒரு வைத்தியசாலையில் இருக்கும் எல்லா நோயும் இருக்கு உங்களுக்கு.. உங்கட பரம்பரை மாதிரி”
நண்பரின் பொறுமை காற்றில்பறந்துவிட்டது. என்றாலும் நாய்க்குட்டி முக்கியமல்லவா. எனவே பறந்த பொறுமையை எட்டிப்பிடித்து கட்டிப்போடுகிறார்.
“அம்மாச்சி”… என்று தேனொழுக ஆரம்பித்து… நான் ஒரு நாய் வாங்குவம் என்று நினைக்கிறன் என்று கூறி முடிக்குமுன் பதில் ஏவுகணையாய் காற்றில் வருகிறது.
“ஏன் எங்கட வீட்டக்கு மட்டும் ரெண்டு நாய் வேணும். ஓன்று காணும் தானே”
நண்பரின் பொறுமை கட்டை அறுத்துக்கொண்டு பாய்கிறது. அவரது கையில் கிடைத்தது தொலைக்காட்சியின் ரிமோட் கொண்ரோல்.
குறிபார்த்து எறிகிறார். ரிமோட் கொன்றோல் காற்றில் பறக்கிறது.
மனைவி இருந்ததோ 4 மீற்றர் தொலையில், அதுவம் நேரெதிரே 90 பாகையில்.
ரிமோட் கொன்றோல் எங்கேயோ இருக்கும் மின் விளக்கினை தாக்கி அதனை உடைத்துவிட்டு தானும் விழுந்துடைந்து தற்கொலை செய்துகொள்கிறது.
இதுதான் அந்த மின்விளக்கு உடைந்த கதை.
எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம். எப்படி இந்தக் குறி தப்பியது என்று. காரணம். மின்விளக்கு இருக்கும் இடத்திற்கும் நண்பருக்கும் ஏறத்தாள 3 மீற்றர் இடைவெளி இருக்கும். அதுவும் நண்பரின் மனைவிக்கும் நண்பருக்கும் நடைபெற்ற முன்னரங்கப் போர்முனையின் வட கிழக்குப் பக்கத்தில்.
நண்பரிடம் இந்த சந்தேகத்தையும் கேட்டேன். நண்பர் ஒரு காலத்தில் இந்திய காடுகளில் போர்ப்பயிட்சி பெற்றவர். குறிதவறாமல் சுடுவார் என்று கூறியிருக்கிறார்.
நண்பர் ஒரு சிறு வார்த்தையில் வேதனையைச் சொன்னார்.
“மிஸ்-பையர்”
அதுசரி… உங்களை ரிமோட்கொண்ரோலால் தாக்கி அழிக்க நினைத்த மனிதரின் நாய்க்குட்டி ஆசையை நீங்கள் எவ்வாறு அனுமதித்தீர்கள் என்று நண்பரின் மனைவியைக்கேட்டேன்.
ஒரு நாயை 25 வருசமா வளர்க்கிறன். அந்த நாயை 30 வருசமா பழக்கம். இன்னாரு நாய் வளர்க்கிறது பெரிய வேலை இல்லை என்றார் சர்வ சாதாரணமாக.
நண்பனின் காது செவிடாகி இருந்தது.
நண்பரைப் பார்த்தேன். அவர் நாய்குட்டிக்குமுன்னால் நின்றபடியே உட்கார் என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். அதுவோ உட்கார மறுத்தது.
அப்போது மனைவி நாயைப் பார்த்து “இரு” என்று கறாரான குரலில் கூறினார்.
நாய்க்குட்டிக்கு முன்பு நண்பர் சோபாவில் குந்திக்கொண்டார். நாயும் நண்பரின் மனைவிக்கு முன்னால் மண்டியிட்டுக்கொண்டது.
நண்பரின் மனைவி என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார்.
நான் புறப்பட்டேன். நண்பர் எனது வாகனம் வரையில் வந்தார். என்னால் ஒரு கேள்வியை மட்டும் அடக்க முடியவில்லை.
“டேய், எப்படியடா மனைவி அந்த விலையான மின் விளக்கையும், ரிமோட்கொன்ரொலையும் உடைத்தபின் நாய்க்குட்டி வாங்குவதற்கு சம்மதித்தார்?” என்றேன்
“வேணாம்…. அதைச் சொன்னால் நீ கதை எழுதி அசிங்கப்படுத்திவிடுவாய்” என்றான்.
இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

”தெறி” விஜய் ஐ சூரசம்ஹாரம் செய்த Oslo முருகன்.

அந்நாட்களில் எனது மூத்தவளுக்கு 2 வயது கடந்திருந்தது. ஆண்டு 1999. நாம் வசித்திருந்ததோ வடமேற்கு நோர்வேயில் ஒரு கிராமத்தில். தமிழர்களுக்கான பொழுதுபோக்குகள் குறைந்த இடம்.
இதே காலத்தில்தான் இப்போது தென்னிந்திய திரைஉலகையும், எனது வயிற்றையும் அடிக்கடி கலக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தார்.
அந்நாட்களில் ஏதோ ஒரு தமிழ்த் தொலைக்காட்சி சேவையும் செய்மதி (சட்டலைட்) மூலமாக உலாவந்துகொண்டிருந்தது. பொழுது போகவேண்டுமே என்பதற்காய் ஒரு டிஷ் ஆன்டன்னாவை பூட்டிக்கொண்டேன். தென்னிந்தியாவில் உலாவிய விஜய் எனது வீட்டுக்குள் வந்ததும் இந்த வழியாகத்தான்.
அந்நாட்களில்தான் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளிவந்திருந்தது. எனவே தொலைக்காட்சியும் இப்படத்தின் பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பினார்கள். அதிலும் இன்னிசை பாடிவரும் என்ற பாடல் திரைப்படத்தைப்போன்று மிகப் பிரபலமாகியதால் அப்பாடல் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஒளிபரப்பாகியது.
எனது மகளுக்கு இந்தப்பாட்டு ஏனோ பிடித்துப்போயிற்று. விஜய் மாமா ஆகினார். சிம்ரன் ஆன்டி ஆகினார். மணிவண்ணண் தாத்தாவாகினார். இந்தப் பாட்டினை எங்கே எப்போது கேட்டாலும் அவளின் முகம் பூவாய் மலர்ந்து, கையும் காலும் தானாகவே ஆடத்தொடங்கின.
தொலைக்காட்சியில் பாடல் ஒலிபரப்பினால் அதன் முன் வாயை ஆ என்று பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் சாப்பாடு தீத்துவதும் பிரச்சனையாக இருக்கவில்லை. பிற்காலத்தில் அவளுக்க என்று அந்தப்பாடலை ஒரு வீடியோ கசட்இல் பதிந்த வைத்திருந்தேன்” அவள் என்னிடம் கட்டுப்பட மறுத்தால் விஜய் மாமாவும். சிம்ரன் ஆன்டியும் அவளைக் கட்டுப்படுத்தினர். மணிவண்ணனை அவளுக்குப் பிடிக்கவில்லை.
காலம் கடந்து கொண்டிருந்தாலும் அவளுக்கு “இன்னிசை பாடிவரும்” பாடலில் இருந்த பிரியம் மட்டும் குறையவவே இல்லை. பிற்காலத்தில் நான் பயந்ததுபோன்று அவளுக்கு விஜய் பைத்தியம் பிடித்துக்கொண்டது. அந்த பைத்தியத்திற்கு என்னிடம் மருந்து இருக்கவில்லை.
இதற்குப்பின் காலம் என்னுடன் கோபித்துக்கொண்டதால் அவள் இங்கிலாந்திலும் நான் நோர்வேயிலும் என்றாகியது. எமது தொடர்புகள் குறைந்துபோயின. பெண்குழந்தையை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்று எனக்கிருந்த கனவுகளைக் கடந்து அவள் சுயம்புவாய் வளர்ந்துகொண்டாள்.
7 - 8 ஆண்டுகளின் பின் என்னுடன் ஒரு மாதம் தங்கியிருக்க வந்திருக்கிறாள்.
அவளுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கிறது இப்போது. சுயாதீனமாய் இயங்கும் மனம் கொண்டவளாயும், இவ்வயதில் உலகத்தையே மாற்றவேண்டும் என்று நினைத்த அப்பனைப்போல் அவளது சிந்தனைகளும் இருக்கிறன்றன. கொள்கைகளில் பிடிவாதக்காறியாய் இருக்கிறாள். வயதுக்கேற்ற திமிர் குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. இவையெல்லாவற்றையும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கிறேன், நான்.
அனால் நான் விரும்பாத ஒன்றை அவள் சுவீகரித்திருக்கிறாள். அவளது உலகம் ஆங்கில உலகமாய் மாறிவிட்டது. எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாடல்கள் என்றிருக்கிறது அவள் உலகம். தடையின்றித் தமிழ் பேசுவாள், அவளுக்கு தேவை என்னும் பொழுதினில் மட்டும். இனி அவளை மாற்றமுடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன் “இன்னிசை பாடிவரும்” என்ற பாடலை யூடியூப் இல் வேண்டுமென்றே இசைக்கவிட்டேன். என்னைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்று சிரித்தாள். கரைந்துபோனேன்.
நேற்று மாலை:
“அப்பா, தமிழ்ப்படம் பார்த்து 100 வருடமாகிவிட்டது, ஒரு படம் சொல். பார்ப்போம் என்றாள்”
“என்ன மாதிரியான படம்? அக்சன், கொமடி, ரொமான்டிக், திறில்லர், ட்ராமா?” என்றேன்
“எனி திங். எ குட் மூவி”
சற்று சிந்தித்தேன்.
“சரி… ஐன்துசன்.கொம்க்கு போய் “காக்கா முட்டை” என்று தேடிப் பாருங்கம்மா” என்விட்டு அயர்ந்துபோனேன்.
சற்று நேரத்தில் என்னை எழுப்பினாள்
“என்னய்யா”
“இவங்க காக்காவின் முட்டையை எடுத்து குடிக்கிறாங்க. பாவம் காக்கா”
“அய்யோ ராசாத்தி, அது படத்துக்காக எடுத்திருப்பாங்க”
“எனிவே… திஸ் ஈஸ் நாட் குட்”
“திரைப்பட காட்சிகளை உண்மை என்று நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதே”
அதன்பின் நான் தூங்கிப்போனேன்.
விழித்துக்கொண்டபோது படம் இடைவேளை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. மகள் படத்தினை மிகவும் ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். இடையிடையே பெரிய சிரிப்புச் சத்ததமும் கேட்டது.
படம் முடிந்ததும் “குட் மூவீ” என்று பாராட்டும் கிடைத்தது.
மகள் விஜய் ஐ மறந்துவிட்டாள் என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்றிரவு அந்த மகிழ்ச்சியில் அயர்ந்து தூங்கிப்போனேன்.
இன்று காலை எழும்புகிறேன். மகள் ஐன்துசன்.கொம் இல் படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன படம் அம்மா” என்று கேட்டேன்
“தெறி”
எனது நெஞ்சு தெறித்துப்போய் விழுந்தது. நான் எதுவுமே பேசவில்லை. எனது நண்பன் Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல் என்று நினைத்தபடியே போர்வையால் தலையை மூடிக்கொண்டேன்.
சற்றுமுன் எழுந்து பார்கிறேன்… மகளின் கணிணி தரையில் கிடக்கிறது. மகளைக்காணவில்லை.
“அம்மா” என்று அழைத்தேன்.
“ம்”
“படம் பார்க்கலியா”
“நோ”
“ஏன்டா”
முறைய்த்துப் பார்த்தாள்.
புரிந்துகொண்டேன்.
Oslo முருகா, தெய்வமய்யா நீ.
உனக்காக நான் முதன் முதலில் நோர்வேயில் மொட்டையடித்து தூக்குக்காவடி எடுக்கிறேன்.

திருமணம் அவசியமா? இணைந்து வாழ்ந்தால் என்ன?

அவளுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு கிராமத்து ராமராஜன். அவளோ உலகத் தாரகை Naomi Campbell போன்ற கறுப்புக் கட்டழகி. எமக்குள் நிறத்தில் மட்டும்தான் ஒற்றுமை இருந்தது. ஆனால் காதலுக்குத்தான் கண்ணில்லையே.
அவளை நான் முதன் முதலில் நேரடியாகச் சந்தித்தது ஒரு கடையில்தான்;. ஆழகிகளால் கவரப்படாத ஆண்கள் யாராவது இருக்கிறார்களா? அதுபோன்றுதான் எனக்கும் முதலில் அவளில் ஒரு ஈர்ப்பு வந்தது. அது பின்னாட்களில் காதலாகியது.
ஒரு நாள் நான், அவளை விரும்புவதாகக் கூறி என்னுடன் சேர்ந்து வாழ வா என்று அழைத்தேன். சில நாட்கள அவளைப் சந்திப்பதும், பார்ப்பதும் பேசுவதுமாய் இருந்தது. சில காலத்தின் பின் நாம் சேர்ந்து வாழத்தொடங்கினோம். உலகறிய திருமணம் என்பதில் நம்பிக்கையில்லாதவன். இது இணைந்து வாழ்தல் முறை. இரண்டரை வருடங்கள் இணைபிரியாது இருந்தோம்.
ஆரம்பத்தில் நான் அவளில் மிகவும் அன்பாகவே இருந்தேன். புது மாப்பிள்ளையைப்போன்று. பின்னான நாட்களில் கவனம் குறைந்தபோது அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் வந்துபோயின. மனித உறவுகளில் எற்படும் கீறல்களைப்போன்றவை அவை.
நான் ஆண்.
ஆஆண்ண்ண்.
மீண்டும் ஒரு தடவை கூறிப்பாருங்கள், ஆஆண்ண்ண்.
அதாவது நெடில்.
பெண்களைப்போல் எம்மால் இருக்கமுடியுமா என்ன?
இப்படி இறைவி திரைப்படத்தில் கூறப்படுவதுபோன்று. அவ்வப்போது அவளைவிட அழகானவர்களை, இளமையானவர்களைக் கண்டால் சபலம் எட்டிப்பார்க்கும். எனினும் தப்பேதும் நடந்துவிடவில்லை.
நம்ம தகுதிக்கு இவளே போதும் என்று மனதை கட்டுப்படுத்தும் கலை வசப்பட்டிருந்தது எனக்கு. வயது காரணமாயிருக்கலாம்.
நேற்று மாலை காலநிலை சிறப்பாக இருந்ததால் இருவரும் நடந்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு நாய் எங்கிருந்தோ ஓடிவந்து என்னை நக்கியது. அவள் அதை புகைப்படமெடுத்தாள். நாயின் உரிமையாளர் ”மன்னித்துக்கொள்ளுங்கள், இவன் எல்லோருடனம் இப்படித்தான்” என்றார். ”பறவாயில்லை” என்றபடியே நாயின் தலையைத் தடவிவிட்டேன்.
இருவரும் அமைதியான ஒரு ஏரியின் கரையோரமாக நடந்து சென்று ஒரு மலையின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்தோம். மிகவும் ஒடுக்கமான, செங்குத்தான ஒற்றையடிப்பாதையை கடந்துகொண்டிருக்கும்போது மேலிருந்து கீழே இறங்கியவர்களுக்காக நாம் சற்றே ஒதுங்கிநிற்கவேண்டியிருந்தது.
அப்போது எனது காலடியில் இருந்த கற்கள் சறுக்கத்தொடங்கின. நான் சமநிலையை இழந்து விழுந்தேன். என் கையைப் பற்றியிருந்த அவளும் விழுந்தாள். எனது காலில் பலத்த அடி. என்னருகில் விழுந்த அவளை கை கொடுத்து எழுப்பியபோது அவள் காயப்பட்டிருப்பது தெரிந்தது. அவள் கண்ணாடி உடைந்துவிட்டிருந்தது. தலைசுற்றுகிறது என்றாள். சற்று உட்கார்ந்திருந்து நிதானித்துக்கொண்டோம். எம்மை கடந்து சென்ற அறிமுகமானவர்கள் இருவர் “காயம் பலமா, உதவி தேவையா” என்று கேட்டார்கள். இல்லை, சமாளித்துக்கொள்ளலாம் என்றுவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் இரத்தம் கட்டியிருந்தது. அவள் வெளிறிப்போய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அவளை உலுப்பினேன். தட்டினேன். இடையிடையே “என்ன?” என்றாள். மறுநிமிடம் மீண்டும் மௌனமாய் வெறிக்கத்தொடங்கிவிடுவாள்.
மனம் திக் திக் என்று அடிக்க, பயம் மெது மெதுவாக மனதைப் பற்றிக்கொண்டது. மலையில் இருந்து இறங்கி வந்தோம். அவள் பேசவே இலலை. அவளை அவ்வப்போது இறுகப்பற்றிக்கொண்டேன்.
அன்றிரவு முழுவதும் அவள் நினைவு தப்பிக்கொண்டிருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவுடன் பேசினேன். காலைவரையில் பாருங்கள். அதன்பின் தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தார்கள்.
காலையில் அவளது நினைவு அடிக்கடி தப்பத்தொடங்கியது. நான் ஏதும் கேட்டால் பல நிமிடங்களின்பின் பதிளித்தாள்: அவளாக ஏதும் பேச மறுத்தாள். உணவு உண்ணவில்லை. அவளது உடலில் சக்தி குறைந்துவருவதை உணர்ந்தேன்.
அவசர அவசரமாக எனது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாகை;கு அழைத்துச் சென்றேன். நேரம் 10 மணியைக் கடந்துகொண்டிருந்தது. வைத்தியருக்காக காத்திருந்தபோது அவள் மயங்கி என்மீது சரிந்தாள். அவளைத் தாங்கிக்கொண்டபோது வைத்தியரும் உதவியாளர்களும் அவளை படுக்கையில் கிடத்தி அழைத்துப்போனார்கள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நானோ பதட்டத்தில் வைத்தியருக்காக காத்திருந்தேன். பத்துநிமிடங்களில் வைத்தியர் வந்து நேற்று என்ன நடந்தது என்று கேட்டறிந்தார். கணிணியைப் பார்த்தபடி யாருடனோ தொலைபேசினார். என்னை மாலை வருமாறு பணித்தார்.
மாலை வந்தபோது டாகடர் என்னை அழைத்துச் சென்று தனது அலுவலகத்தில் உட்கார்த்தினார். “அவளுக்கு எப்படி டாக்டர்” என்றேன்.
“அவரது தலையில் அடிபட்டிருக்கிறது. அதனால் அவர் நினைவிழந்திருக்கிறார். மூளையில் பெருத்த இரத்தக்கசிவு ஏற்பட்டதனால் அவர் சிந்தனை ஆற்றல், உடலுறுப்புக்கள் என்பன செயலிழந்துவிட்டன என்றார். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. டாக்டர் ஆறுதல் கூறியபடியே அவருக்கு காப்புறுதி ஏதேனும் உண்டு அப்பணத்தைக்;கொண்டு நாம் மேலதிக சிகிச்சையளிக்க முயற்சியுங்கள் என்றார்.
நான் காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது “உடனே வாருங்கள், அதற்கான ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பிப்போம் என்றார்கள். அரைமணிநேரத்தில் அங்கு நின்றிருந்தேன்.
தங்களது அனுதாபத்தை தெரிவித்தார்கள். சோர்வாகப் புன்னகைத்தேன். என்னை அழைத்துச் சென்று ஒரு காரியலயத்தில் உட்கார்த்தி தேனீரும் தந்தபின் உரையாடத்தொடங்கினார்கள்.
என்ன நடந்தது என்பதை மிகவும் தெளிவாக விபரிக்கவேண்டிவந்தது. எழுதிக்கொண்டார்கள். “இதுபற்றி மிக விரைவில் ஒரு முடிவுசொல்கிறோம். தயவுசெய்து இங்கு காத்திருங்கள்” என்றுவிட்டு அகன்றுகொண்டார்கள்.
தனிமை அசௌகரியமாகவும், மனது பழைய நினைவுகளிலும் அலைந்துகொண்டிருந்தது. அவளின் ஸ்பரிசத்தினை நினைத்துப் பார்த்தேன். மிருதுவான அவளது தோல். கறுப்பென்றாலும் அவள் கட்டழகி. ஒரு சிறு விபத்து எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை புறட்டிப்போடுகிறது. அவளுக்கு மிக மிக அருகில் நானும் விழுந்திருந்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவி;லை. அவள் எறத்தாள ஜடமாகிவி;டாள். வாழ்க்கையில் எதுவுமே நிட்சயமில்லை என்பதை மீண்டும் உணர்ந்துகொண்டேன்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. 15 நிமிடங்களில் என்னை அழைத்துவந்தவர் வந்தார்.
“உங்களின் காப்புறுதிப் பணம் உங்களுக்கு கிடைக்கும்.”
“மிக்க நன்றி”
“தயவு செய்து இந்தப் படிவத்தை நிரப்பித்தாருங்கள்” என்றபடியே ஒரு படிவத்தை நீட்டினார்.
அதில் காப்புறுதி செய்யப்பட்டவரின் பெயர் என்று இருந்த இடத்தில் Samsung galaxy S4 என்று எழுதினேன்.
இப்போது புதிதாய் ஒருத்தியுடன் வாழத்தொடங்கியிருக்கிறேன். அவளின் பெயர் Huawei P9. செம செக்சியாக இருக்கிறாள். புகைப்படங்கள் எடுப்பதில் இவள் கில்லாடி.
தலைப்பைப் பார்த்து கதையை வாசித்த உங்களுக்கு நன்றி கூறாவிட்டால் என்னப்பன் Oslo முருகன் மன்னிக்கமாட்டா